இலங்கையில் பெருங்கற்கால ஈமத்தாழி சின்ன முறை காணப்பட்ட இடங்களில் ஒன்றாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள குஞ்சுப்பரந்தன் காணப்படுகிறது. இங்குள்ள டி8 என்ற குடியேற்றத் திட்டத்தில் உள்ள காணி 1990 ஆம் ஆண்டளவில் பயிர்ச் செய்கைக்காகத் திருத்தப்பட்டபோது, எதிர்பாராத வகையில் முழுமையான தாழியும், தாழியின் உடைந்த பாகங்களும் வெளிவந்தன.
இது பற்றிய செய்தியை அப்போதைய உதவி அரசாங்க அதிபராக இருந்த கலாநிதி க.குணராசா அவர்களுக்குத் தெரியப்படுத்தியபோது, அவர் நேரில் சென்று அவற்றைப் பார்வையிட்டதுடன், அத்தாழிகள் பற்றியும் விரிவான கட்டுரையை எழுதியிருந்தார். வட இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது முழுமையான பெருங்கற்கால ஈமத்தாழி என்ற வகையில் இதற்குத் தனி முக்கியத்துவம் உண்டு. நான்கடி உயரமும், எட்டடி சுற்று வட்டமும் கொண்ட இத்தாழியின் விளிம்பு ஓரங்குலத் தடிப்புடையது. தாழியின் வெளிப்புறத்தில் சில அலங்காரக் கோடுகள் காணப்படுகின்றன. தாழிக்குள் மனித எலும்புக் கூட்டின் சில பாகங்களும், சாம்பல் போன்ற கரிய பொருள், இரு மட்கலங்கள் என்பன காணப்பட்டன. இப்பொருட்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இத்தாழி காணப்பட்ட வயற்பரப்பின் ஓரங்களில் காணப்படும் உடைந்த தாழிகளையும், பலவகைப்பட்ட மட் பாண்டங்களையும் நோக்கும் போது, இங்கு 'பொம்பரிப்பு' போன்ற பெருங்கற்கால ஈமத்தாழி மையம் இருந்திருக்கலாம் என்பது தெரிகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்த அளவில் பெருங்கற்கால குடியிருப்புக்கள் இருந்த பிராந்தியமாகப் பூநகரி காணப்படுகிறது. 1980 களில் கலாநிதி இரகுபதியும், 199094, 20042005 ஆண்டு காலப்பகுதியில் இக்கட்டுரை ஆசிரியரும் இங்கு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகளின்போது கல்முனை தொட்டு நாச்சிக்குடா வரையுள்ள கடற்கரை சார்ந்த பிரதேசத்தில் நுண்கற்காலம் தொட்டு தற்காலம் வரை வாழ்ந்து வரும் மக்களது பலதரப்பட்ட பண்பாட்டுச் சான்றுகளைக் கண்டுபிடிக்க முடிந்தது. அவற்றுள் பெருங்கற்காலக் குடியிருப்புக்கள், ஈமச் சின்னங்கள் தொடர்பாகக் கிடைத்த சான்றுகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இச்சான்றுகள் இற்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் 'விமலா பேக்கிலே' என்ற அறிஞர் கந்தரோடை தொட்டு புத்தளத்தில் உள்ள பொம்பரிப்பு வரை தென்னிந்தியா குறிப்பாகத் தமிழகத்தை ஒத்த பெருங்கற்காலத் திராவிட மக்கள் வாழ்ந்திருக்கலாம் எனக் கூறிய கருத்தை உறுதி செய்வதாக உள்ளது.
மேற்கூறப்பட்ட கற்கால, நுண்கற்கால, பெருங்கற்காலப் பண்பாடு தொடர்பான சான்றுகள் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு வட இந்தியாவில் இருந்து மக்கள் புலப்பெயர்வு ஏற்பட முன்னரே தென்னிந்தியாவின் தென்பகுதியில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் கிளிநொச்சியிலும், இலங்கையின் ஏனைய பிராந்தியங்கள் பலவற்றிலும் வாழ்ந்துள்ளனர் என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றன. அந்த மக்களே கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து மொழியடிப்படையில் தமிழ் சிங்கள மக்களாக இன அடிப்படையில் வேறுபட்டனர். அதை இரணைமடுவிலும், பூநகரியிலும் கிடைத்துள்ள தொடக்க கால எழுத்துக்கள், சாசனங்கள் உறுதி செய்கின்றன. தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாட்டின் முதிர்ச்சி நிலையில் தமிழ் மொழி தோன்றியதை அப்பண்பாட்டு மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்டுள்ள 2300 ஆண்டுகளுக்கு முந்திய பிராமி எழுத்துக்கள் உறுதி செய்கின்றன. இதனால்தான் திராவிட மொழிகளில் முதலில் தமிழில் வளமான சங்க இலக்கியம் தோன்றக் காரணமாகும். இலங்கையிலும் இப்பண்பாட்டின் முதிர்ச்சி நிலையில் தமிழ் மொழி புழக்கத்திற்கு வந்ததை அநுராதபுரம், அம்பாந்தோட்டை, கந்தரோடை முதலான இடங்களில் கிடைத்த பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் உறுதி செய்கின்றன. இருப்பினும் அதிக அளவில் இவ்வெழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களாக இரணைமடு, பூநகரி, ஈழவூர் (பொன்னாவெளி) முதலான இடங்கள் இருப்பது இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
இரணைமடுவில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வின் போது, குளத்தின் மேற்குக்கரைப் பகுதியில் சிதறுண்டு காணப்பட்ட மட்பாண்டங்களிடையே கி.மு. 32 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்துக்கள் பல கண்டு எடுக்கப்பட்டுள்ளன. அவ்வெழுத்துக்கள் தமிழுக்கும், பிராகிருத மொழிக்கும் உரியனவாகக் காணப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் இனத்தால் ஒரே இன வர்க்கத்தைச் சேர்ந்த தமிழ் சிங்கள மக்கள் மொழி வேறுபாட்டால் இரு வேறுபட்ட பண்பாடு கொண்ட இனக் குழுக்களாக தோன்றி வளர்ந்தனர் என்பது தெரிகிறது.
அயல்நாட்டு உறவுகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த உரோம, வட இந்திய, தென்னிந்திய, சுதேச நாணயங்கள், இந்திய, உரோம, அரேபிய, மட்பாண்டங்கள், கல்மணிகள் என்பன கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து இப்பிராந்தியம் மேற்குறிப்பிட்ட நாடுகளுடன் நெருங்கிய வணிக கலாசார உறவுகளைக் கொண்டிருந்ததை உறுதிசெய்கின்றன. அதிலும் பூநகரி வட்டாரத்தில் கிடைத்த சங்க கால சேர, சோழ, பாண்டிய நாணயங்கள், பாளி இலக்கியங்கள் கூறுவதுபோல் அக்காலத்தில் வட இலங்கை தமிழகத்துடன் நெருங்கிய வணிக கலாசார உறவுகளைக் கொண்டிருந்தமைக்கு சான்றாக அமைகின்றன.
இரணைமடுவில் இந்துப் பண்பாட்டின் தொன்மை தமிழகத்தைப் போல் இலங்கையிலும் இந்துக் கோவில்களைக் கற்களால் அமைக்கும் மரபு கி.பி. 6 ஆம் நுõற்றாண்டின் பின்னரே தோற்றம் பெற்றன. இதற்கு முற்பட்ட காலத்தில் மண், மரம், சுதை கொண்டு அமைக்கப்பட்டதை கல்வெட்டுக்களும், இலக்கியங்களும் உறுதி செய்கின்றன. இதன் தொடக்க கால ஆதாரமாக பெருங்கற்கால குடியிருப்புக்கள், ஈமச்சின்னங்களில் கண்டுபிடிக்கப்பட்ட உருவங்கள், மட்பாண்டக் குறியீடுகள் உறுதி செய்கின்றன. கிளிநொச்சியில் பெருமளவான சுடு மண்ணாலான ஆண் பெண் உருவங்கள், சிலைகள், சிற்பங்கள், மிருக, தாவர உருவங்கள் கிடைத்துள்ளன. இவை அக்கால வழிபாட்டுச் சின்னங்களாக நோக்கப்படுகின்றன. இரணைமடு, உருத்திரபுரம், பூநகரி முதலான இடங்களில் ஆண் பெண் உருவங்களுடன் இலிங்க வடிவில் அமைந்த பல சுடுமண் உருவங்கள் கிடைத்துள்ளன. இவற்றை ஆய்வுசெய்த 'கலாநிதி சிரான் தெரணியகலா' அவர்கள் இலங்கையில் தாய்த் தெய்வ வழிபாடு தொன்மை என்பதற்கு இவை சான்றாக அமைகிறன எனக் குறிப்பிடுகிறார். இங்கு கிடைத்த இலிங்க உருவங்களும், சூலம் பொறித்த மட்பாண்டங்களும் இற்றைக்கு 2300 ஆம் ஆண்டுகளுக்கு முன்னரே சிவ வழிபாடு இருந்ததற்குச் சான்றாகும், இலங்கையின் வரலாறு கூறும் 'மகாவம்சம்' இற்றைக்கு 2400 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டுகாபயன் காலத்தில் அநுராதபுரத்தில் இருந்த இரு இந்து ஆலயங்கள் பற்றிக் கூறுகின்றது. அச்சான்றை ஆராய்ந்த "பேராசிரியர் பரணவிதான' அவற்றில் ஒன்று சிவன் ஆலயம் எனவும், மற்றையது பிராமணர் வாழந்த இடம் எனவும் கூறியிருப்பது இங்கு நோக்கத்தக்கது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பொதுவாக இலங்கையில் இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்துப் பண்பாடு இருந்ததற்கான சான்றுகள் காணப்பட்டாலும், ஐரோப்பியர் ஆட்சிக்கு முந்திய (கி.பி. 16 க்கு முந்திய) ஆலயங்கள் பற்றி சான்றுகள் அதிகம் காணப்படவில்லை. இதற்கு போத்துக்கேயர், ஒல்லாந்தர் இந்து மதத்திற்கு எதிராகக் கடைப்பிடித்த கலையழிவுக் கொள்கையே காரணமாகும். ஆயினும் ஐரோப்பியர் ஆட்சிக்கு முந்திய கால ஆயுதங்கள் பற்றிய தகவல்கள், கல்வெட்டுகள், நாயன்மார் பாடல்கள், இலக்கியங்களில் பல ஆதாரங்கள் உண்டு. ஏன் போத்துக்கேய ஆசிரியரான குவைரோஸ் சுவாமிகள் கூட தனது நுõலில் 'யாழ்ப்பாணத்தில் இருந்த 500 க்கு மேற்பட்ட இந்து ஆலயங்களை இடித்தழித்து, அவற்றின் கற்களைக் கொண்டு கோட்டைகள், கிறிஸ்தவ ஆலயங்கள் கட்டியதாக'க் கூறுகிறார். அதை யாழ்ப்பாணக் கோட்டையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாய்வுகளும் உறுதி செய்கின்றன.
ஆயினும் போத்துக்கேயர். ஒல்லாந்தர் ஆட்சி, கிளிநொச்சி போன்ற வன்னிப் பிராந்தியத்தில் அதிக ஆதிக்கம் ஏற்படாததால் அங்கெல்லாம் புராதன ஆலயங்கள் பல இருக்க இடமுண்டு. அவற்றின் வரலாற்றை ஆராய்ந்தால் பல உண்மைகள் வெளிவரும் என்பதற்கு இக்கட்டுரை ஆசிரியர் பூநகரியில் மேற்கொண்ட ஆய்வுகள் சிறந்த உதாரணமாகும்.
இக்கட்டுரை ஆசிரியர் 1990 93 காலப் பகுதியில் பூநகரி மண்ணித்தலை வட்டாரத்தில் மேற்கொண்ட கள ஆய்வின்போது மண்ணில் புதையுண்ட நிலையில் அழிவடைந்த ஆலயத்தின் சிதைவுகளை அடையாளம் காணமுடிந்தது.
கோறக்கல், சுதை, சுண்ணாம்பு, செங்கட்டி கொண்டு அமைக்கப்பட்ட இவ்வாலயம் ஐந்து அடி நீள அகலத்தில் கர்ப்பக்கிருகம், அந்தராளத்தைக் கொண்டுள்ளது. மூன்று தளத்தில் அமைந்த இதன் விமானம் 13 அடி உயரம் கொண்டது. இதன் தேவகோட்டம், சாலை, கர்ணக்கூடு என்பன கி.பி. 10 ஆம் நுõற்றாண்டைச் சேர்ந்த சோழக் கலை மரபிற்குரியதென்பது தமிழ் நாட்டு கலை வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.
அண்மையில் மண்ணித்தலை ஆலயத்திற்கு தெற்கே கௌதாரிமுனை என்ற இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஓர் ஆலயத்தின் அழிபாடுகளை அடையாளம் காண முடிந்தது. சிறிய பற்றைக் காடுகளாலும், பனை மரங்களாலும் ஆலயத்தின் அமைப்பை அடையாளம் காணமுடியாத நிலையில் இதை அடையாளப்படுத்திய போது ஆலயத்தை மூடிய நிலையில் பாம்புப் புற்றுகளும் ஆலயத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஆலமரங்களும், பனைமரங்களும் வளர்ந்து காணப்பட்டன. மிகுந்த பயத்துடன் இவ்வாலயத்தை துப்பரவு செய்து பார்த்தபோது ஏறத்தாள 70 அடி நீளத்திலும், 30 அடி அகலத்திலும் அமைந்த இவ்வாலயம் கர்ப்பக்கிருகம், அந்தராளம், முன்மண்டபம், கொடிக்கம்பம், துணைக்கோவில் கொண்ட ஆலயம் என்பது தெரிய வந்தது.
கோறக்கல், சுதை, சுண்ணாம்பு, செங்கட்டி கொண்டு அமைக்கப்பட்ட இவ்வாலயம் மண்ணித்தலைச் சிவாலயத்தைவிடக் காலத்தால் பிற்பட்டதென்பது தெரிகிறது. ஆனால் சுற்றாடலில் பல நூறு ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் காணப்பட்ட போதும் அந்த இடத்தில் பழைமை வாய்ந்த ஓர் ஆலயம் கைவிடப்பட்ட நிலையிலும் அதன் தோற்றம் திராவிடக் கலை மரபுடன் காட்சியளிப்பது இவ்வாலயமும் ஐரோப்பியர் ஆட்சிக்கு முன்னர் கட்டப்பட்டிருக்கலாம் என்பதைக் கட்டியம் கூறுவதாக உள்ளது.
கிளிநொச்சியின் தொன்மை பற்றிய மேற்கூறப்பட்ட சான்றுகள் அப்பிராந்தியத்தின் எதிர்கால ஆய்விற்கான ஒரு தொடக்கப் புள்ளியாகும். எதிர்கால ஆய்வுகள் மேலும் பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என நம்புகிறேன்.
thankuuuuuuuuuuuuuuuu
ReplyDeletethankuuuuuuuuuuuuuuuu
ReplyDeletesuper.........
ReplyDelete