இலங்கையில் 12 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதெனக் கருதப்படும் ஆதி மனிதனின் முழுமையான எலும்புக்கூடு ஒன்று பாஹியங்கல குகையில் இருந்து தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொல்லியல்துறை கூறுகிறது.இலங்கையின் கலுத்துறை மாவட்டத்திலே பாஹியங்கல என்ற இடத்தில் தொல்லியல் ஆய்வுகள் செய்யப்பட்டுவரும் குகையில் இருந்து இந்த எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியில்துறை தெரிவிக்கிறது.
பலங்கொட மனிதன் என்று சொல்லப்படும் இலங்கையின் ஆதி மனிதனுடைய முழுமையான எலும்புக் கூட்டை அகழ்வாராய்ச்சியின்போது தாங்கள் கண்டுபிடித்துள்ளதாகஇலங்கை தொல்லியல் துறையில் அகழாய்வுப் பணிகளின் இயக்குநரான டாக்டர் நிமல் பெரேரா பிபிசியிடம் உறுதி செய்தார்.
இதற்கு முன்னாலும் பலங்கொட மனிதர்களின் எலும்பு எச்சங்கள் தமக்கு கிடைத்திருக்கின்றன என்றாலும், அவை எலும்புக்கூட்டின் சில பாகங்கள்தான் என்றும், இப்படி முழுமையான எலும்புக்கூடு கிடைத்ததென்பது இதுவே முதல்முறை என்றும் அவர் கூறினார்.
கண்டெடுக்கப்பட்ட எலும்பிலிருந்து கார்பன் மாதிரிகளைப் பிரித்தெடுத்து கார்பன் டேட்டிங் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டு, இந்த எலும்புக்கூட்டின் வயது துல்லியமாகக் கண்டெறியப்படும் என்று பெரேரா கூறினார்.
ஆனால் இந்த குகைகளில் ஏற்கனவே நடந்த அகழ்வாராய்ச்சியில் இங்கே கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களின் வயதை வைத்துப் பார்க்கும்போது இந்த எலும்புக்கூடு நிச்சயம் 12 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் தமக்கு தோன்றுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த இடத்திலிருந்து சில கற்கருவிகளையும், உணவு சம்பந்தமான எச்சங்களையும் நாங்கள் தோண்டி எடுத்துள்ளதாகவும், அந்த ஆதி மனிதனின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கங்கள் பற்றி நாம் சில விஷயங்களை புரிந்துகொள்வதற்கு உதவியாக இந்தப் பொருட்கள் அமைந்துள்ளன என்றும் நிமல் பெரேரா கூறினார்.
பொறிமுறைக்குரிய வடிவங்களுடன் இந்த கற்கருவிகள் அமைந்திருக்கின்றன என்றும், நத்தை, மட்டி போன்ற ஓடுடைய உயிரினங்களை இவர்கள் உண்டு வாழ்ந்தார்கள் என்றும், உப்பு பற்றி இவர்கள் அறிந்திருந்தார்கள் என்றும் நாம் நம்ப இடமிருப்பதுபோல இங்கே கண்டெடுக்கப்பட்ட விஷயங்கள் அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment