கொழும்பு நூதனசாலையானது அன்னியர் ஆட்சிக்கால கட்டத்தில் அதாவது கி.பி 1877 ஆம் ஆண்டளவில் அரம்பிக்கப்பட்டது. ஏறத்தாழ 134 ஆண்டுகளுக்கு முன்பு அக்கால தேசாதிபதி ஸ்ரீ வில்லியம் கிறகறி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நூதனசாலை ஐம்ஸ் சமிந்தார் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இந்த நூதனசாலை 1942 ஆம் ஆண்டு பி.சி.பி. திறனியகலை என்பவரின் முகாமைத்துவ நிர்வாகத்தின் கீழ் தேசிய அந்தஸ்துப்பெற்ற ஓர் உயரிய கலைக்கூடகமாக விளங்க வித்திடப்பட்டது.
இந்நூதனசாலையில் சரித்திர கலாசார தேவைக்கு அமைய 1967 தொடக்கம் 1973 க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பல வரலாற்றுச் சின்னங்கள், தேசிய மரபுரிமைச் சின்னங்கள் என்பன அருங்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. யாவருக்கும் பயனுள்ள வகையில் சரித்திர, வரலாற்று, பண்பாட்டு அம்சங்களை நினைவுகூரும் வகையில், காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளமையால் ஆசியாவிலேயே அதிசிறந்த அருங்காட்சியகமாக இன்று இந்நூதனசாலை விளங்குகின்றது. ஏறத்தாழ முந்நூறுக்கு மேற்பட்ட அரும்பெரும் காட்சிப் பொக்கிஷங்கள், அம்சங்கள் செறிந்ததாகவும் மற்றும் விலங்கியல் சார் அம்சங்கள், சரித்திர ரீதியில் கூர்ப்பியல் சார், ஆய்வுக்கான அம்சங்கள், துணுக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அருங் காட்சியகமாகவும், ஆய்வகமாகவும், இந்நூதனசாலை விளங்குகின்றது.
இங்கு பாதுகாக்கப்படும் இங்கு பாதுகாக்கப்படும் மரச் சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், கற் சிற்பங்கள் மூலம் பண்டைக்காலச் சிற்பங்களின் பழைமையினை, அவற்றின் தொன்மையினை வடிவமைப்பினை, வழிபாட்டு நிலைப்பாட்டினை, நாம் இன்றும் அறிய முடிகின்றது. குறிப்பாகப் பண்டைய இந்து, மற்றும் பௌத்தமத வழிபாட்டுச் சின்னங்களின், பண்டைய மகத்துவத்தை உன்னதத்தினை வெளிப்படுத்தும் கேந்திர ஸ்தானமாக இக்கலையகம் விளங்குகிறது. இந்து மதச்சமய குரவர் நால்வருள் சுந்தர மூர்த்தி சுவாமிகள், அப்பர், திருஞானசம்பந்தப் பெருமான், ஆகியோரது சிற்பங்களை இங்கே காண முடிகின்றது. இந்து சமயத் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிச் சின்னங்கள், சிவன் பார்வதி உருவச் சின்னங்கள், எருது வாகனச் சின்னங்கள், நந்தி, மூஷீக வாகனம், அக்கால வழி பாட்டில் இருந்தமை குறிப்பாகப் பொலநறுவை காலகட்டத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்து சமயச் சின்னங்கள், இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவை தவிர பலதரப்பட்ட நோய்களுக்கு என வடிவமைக்கப்பட்ட முகமூடிகள், பௌத்த மதச் சின்னங்கள், புத்த பிரானது பல வகைப்பட்ட சிலைகள், ஆகியவற்றை ஆங்காங்கே நாம் காணமுடிகின்றது. பண்டைய இசைக்கருவிகளின் தொகைகளையும், பண்டைய மக்களின் நாரிசை வாத்தியங்களான வீணை, தம்புரா, சங்கு, புல்லாங்குழல், தோல்வாத்தியங்களான மேளங்கள் என்பவற்றையும் இங்கே காணமுடிகின்றது.
பெறுமதிமிக்க ஓவியப்படங்கள், வரலாற்றுப் பெருமைமிக்கவை. தத்ரூபமான சித்திரிப்பு ஓவியப் படங்கள், பிரமிக்க வைப்பவை. அவற்றுள் சில ஆன்மீகம் சார்ந்தவையாகவும், சில பௌத்தமத ஜாதகக் கதைகளை எடுத்தியம்புபவையாகவும், மேலும் சில தேவர்கள் அணியாகச் செல்லும் அற்புத அலங்கார அலங்கரிப்புக் காட்சிகள் செறிந்தவையாகவும் காணப்படுகின்றன. இவை தவிர சிகிரியா, தம்புள்ள, பொலநறுவை, ஒவியங்கள் என்பன மிகவும் பிரமிக்க வைப்பவையாக விளங்குகின்றன.
அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த உள்ளக விளையாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த விளையாட்டுக் கருவிகள் பொருட்கள் என்பன இக்கலைக் கூடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. மேலும் பண்டைய கால விளக்குகள், கூரைமுகப்பில் இருந்து தொங்கும் வேலைப்பாடு செறிந்த கலையம்சம் செறிந்த விளக்குகள், பண்டைய பயன்பாட்டில் நடைமுறை வழக்கத்தில் இருந்த மரத்தளபாடங்களான மேசைகள், கதிரைகள், அவற்றின் கலைத்துவம் செறிந்த மற்றும் தேவைப்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தவற்றை இந் நூதனசாலையினுடாகக் காணும் வாய்ப்பு கிட்டுகின்றது.
மரத் தளபாட அம்சங்களைக் கருத்தில் எடுத்து நோக்கும்போது குறிப்பாக மரத்தள பாடத்தில் உரிய வகையில், உயரிய முறையில் உயர்ந்த தர மரத்தில் செதுக்கப்பட்ட தேக்கு மரக் கப்புகள், கதிரைகள், மேசைகள், கட்டில்கள், வாசல் நிலைகள், ஒல்லாந்தர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட அலுமாரிகள், சிறிய பண்டச் சேமிப்பு அலுமாரிகள், என்பன இந்நூதன சாலையில் பெரிதும் காணப்படும் சிறப்பு மிக்க அம்சங்களாகும். இலங்கையின் முதல் பிரதமரான டி. எஸ். சேனாநாயக்க அவர்களால் பயன்படுத்தப்பட்ட மேசைத் தளபாட நினைவுச் சின்னங்கள் அவரது வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய புகைப்படங்கள், அவரது தந்தை - தாயின் புகைப் படங்கள் என்பன காட்சிக் கூடங்களை அலங்கரிக்கும் வரலாற்றுப் பெருமை மிக்க பொக்கிஷங்கள் எனலாம். மேலும் முற்காலத்தில் சமூகமட்டத்தில் உயரிய அந்தஸ்து பெற்றவர் பயன்படுத்திய போக்குவரத்து ஊடகமான வண்டி என்பவற்றையும் கண்ணுறும் வாய்ப்பு எமக்குக் கிட்டுகிறது.
இவைதவிர பல வகைப்பட்ட ஆபரணங்கள் பண்டைய இலங்கையில் குறிப்பாகத் தென் இலங்கை மக்களால் பயன்படுத்தப்பட்ட ஆபரணங்கள் அவற்றின் கைப்பணி வேலைப்பாடுகளை வெளிப்படுத்துவதாக விளங்குகின்றன. கண்டி ராஜதானியின் கடைசி மன்னனால் பயன்படுத்தப்பட்டு வந்த சிம்மாசனம், இறுதியில் அதாவது அன்னியரால் சிறைப்பிடிக்கப்பட்ட போது மன்னனால் அணியப்பட்டிருந்த இரத்தக்கறை தோய்ந்த உடைகள், கால்கள் வைக்க சிம்மாசனத்தின் கீழ் பயன்படுத்தப்படும் சிறிய மேசை, ஓலைகள், ஓலைச்சுவடிகள், அக்கால வழக்கத்தில், இருந்த சிறிய உபகரணங்களான கத்திரிக்கோல், கத்தி, என்பனவும், இலங்கையின் பண்டைய கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களைச் செவ்வனே எடுத்தியம்புகின்றன. ஆபரண வகைகளில் பரவலாகக் கழுத்து அணிகலன்கள், நீண்ட கழுத்துச் சங்கிலிகள், தலை சீவ உதவும் சீப்பு, தோடுகள், சிங்கள மகளிர் பெரிதும் அணியும் சேலை அலங்கரிப்பு ‘புறோச்’ வகைகள் என்பனவும் மற்றும் கைகளுக்கு அணியும் காப்பு வகைகள், மணிக்கட்டை ஒட்டிய கையணி ஆபரணமான பிறேஸ்லட், கால் விரல்களுக்கு அணியும் மெட்டிகள் போன்றன அணிகலன் வரிசையில் இடம்பெறும் ஆபரணங்களாகும். கண்டி கடைசி அரசனின் கிரீடமும் இங்குள்ளது. இவையாவும் 1815 ஆம் ஆண்டளவில் கண்டி இராசதானியின் வீழ்ச்சிக்குப் பின்னர் பிரித்தானிய ஆட்சியாளரால் பிரித்தானியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் இலங்கையிடம் 1930 ஆம் ஆண்டளவில் ஒப்படைக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.
ஆயினும் அவற்றில் சில 1820 ஆம் ஆண்டளவில் பிரித்தானியாவில் பொது ஏலத்தில் விற்பனைக்கு விடப்பட்டதாகவும் அறியமுடிகின்றது. கலைத்துவம் செறிந்த ஓர் அரும் பெரும் நூதனசாலையாக விளங்கும் தொன்மையான பித்தளையினாலான கலை அம்சம் நிறைந்த பொருட்கள், ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்ட அம்சங்கள், ஏராளம். சரித்திர, சமய சமூக, சம்பிரதாயபூர்வமான கல்வெட்டுகள், இலங்கைச் சரித்திரத்தில் இடம்பெற்ற பலதரப்பட்ட நாணயங்கள், நூதனசாலையில் சிறந்த வகையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்நூதனசாலையில் உல்லாசப் பயணிகளாலும், பாடசாலை மாணவர்களாலும் கல்வித்துறைசார் ஆய்வுக்கும், ஆய்வாளர்களுக்கான ஆக்கங்களுக்கும் உரிய வகையில் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் காட்சிக்கு இங்கு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சரித்திர வரலாற்றுச் சின்னங்களை சீரிய வகையில் கண்ணுற்று வரலாற்றுச் சான்றுகளுடன் தமது அறிவினை மெருகூட்டி வளர்க்கவும் இந்நூதன சாலை பெரும் பங்காற்றி வருகின்றது. இந்நூதனசாலையில் சில அரும்பெரும் தொல் பொருள் கலையம்சங்கள் சில காலக்கிரமத்தில் கொழும்பு தேசிய நூதனசாலையில் இருந்து எடுக்கப்பட்டு தேசிய தொல்பொருள் நூதனசாலைக்கு மாற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றமையும், இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இங்கு ஒரு பகுதியில் காணப்படும் நூதன சாலையின் நூலகம் தொன்மை வாய்ந்த பல தகவல்களை ஒருங்கே பெற்றுக்கொள்ளப் பூர்த்தி செய்யும் ஓர் தகவல் கூடமாகத் விளங்குகின்றது.
No comments:
Post a Comment